கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 02 ஜூன், 2022 02:46 PM
வெளியிடப்பட்டது: 02 ஜூன் 2022 02:46 PM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 02 ஜூன் 2022 02:46 PM

சமூக ஊடகங்கள் இப்போது நம் அன்றாடச் செயல்பாட்டில் ஒன்றாகிவிட்டது. அன்றாடக் கடமைகளுக்கு இடையில் சமூக ஊடகங்களைப் பார்ப்பது நம் வாடிக்கை. சமூக ஊடகங்கள் பார்ப்பதற்கு இடையில் அன்றாடச் செயல்களைச் செய்கிறோம் என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை. அதனால் அதிகமான வெறுப்புப் பேச்சுகளும் விமர்சனமும் வன்முறையும் இவற்றில் நிறைந்திருக்கும். இதனால் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராகச் சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிர்வாத்துக்குப் புகார்கள் வருவதும் அது தொடர்பாக அவர்களின் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரலில் பேஸ்புக்கில் நடந்த வெறுப்புப் பேச்சு இடுகைகள், மார்ச்சில் நடந்ததைக் காட்டிலும் 37.82 சதவீதம் அதிகம் என நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்தாண்டு மார்ச்சில் வெளியிட்ட அறிக்கைகள் 38, 600 வெறுப்புப் பேச்சு இடுகைகள் கண்டறியப்பட்டன. அதே நேரம் கடந்த ஏப்ரலில் 53,200 இடுகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராமில் வன்முறை ரீதி உள்ளடக்கங்கள், மார்ச்சில் நடந்ததைக் காட்டிலும் 86 சதவீதம் அதிகம் என அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்தாண்டு மார்ச்சில் அறிக்கை வெளியிட்ட 41, 300 வன்முறை உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டன. அதே நேரம் கடந்த ஏப்ரலில் 77,000 உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை, பயனாளர்களின் புகார்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த வகையில் கண்டறியப்பட்ட வெறுப்புப் பேச்சு இடுகைகள், வன்முறை உள்ளடக்கங்களுக்கான பயனாளர்களின் புகார்கள் அடிப்படையில் நீக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.