யூரின் டெஸ்ட் எடுத்து பார்த்தபோது கர்ப்பம் என்று இரண்டு கோடுகள் காட்டியது. இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. மேலும் இரண்டு வாரங்கள் கழித்து ஸ்கேன் மற்றும் இரத்த பரிசோதனைகள் செய்து பார்க்கலாம் என்று கூறி அனுப்பி இருந்தேன். ஒரு வாரத்திற்குள்ளாகவே இருவரும் வந்ததும் கட்டாயமாக ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். ரமீனா பேசத் தொடங்கியது, வார்த்தைகளே வரவில்லை. அழ ஆரம்பித்துவிட்டார்.
அவர் கணவர் ராஜாதான் நிலைமையை விவரித்தார். நேற்று இரவு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதாகும் அதிலிருந்து ரமீனா அழுது கொண்டே இருப்பதாகவும் கூறினார். மீண்டும் வீட்டிலேயே யூரின் டெஸ்ட் எடுத்து பார்த்த போது ஒரு கோடு மட்டுமே வந்ததாகவும் அதனால் கர்ப்பம் இருந்ததா? இல்லையா? என்ற ஒரே குழப்பத்தில் இருப்பதாகவும் கூறினார்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப் பையில் கரு இருப்பதற்கான எந்த விதமான அடையாளங்களும் இல்லை. மாதாந்திர போக்கு சமயத்தில் கர்ப்பப்பையின் அமைப்பு எவ்வாறு இருக்குமோ? அவ்வாறு இருந்தது. ரத்தத்தில் கர்ப்பம் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து HCG டெஸ்ட் எடுத்து பார்த்தபோது அதில் ஹார்மோனின் அளவு 27 என்று வந்தது. இந்த ஹார்மோன் அளவு மிகவும் குறைவு என்றாலும் கட்டாயமாக கர்ப்பம் இருந்திருக்கிறது என்பதற்கான அடையாளம்.
பொதுவாக மாதா மாதம் சரியாக மாதவிடாய் வருபவர்களுக்கு, மாதவிடாய் வரவேண்டிய நாளில் வராமல் இருந்தால், அந்த டெஸ்ட் செய்து பார்த்தாலே கர்ப்பம் என்பது தெரிந்துவிடும். இரண்டு வாரங்கள் கழித்து ஸ்கேன் செய்து கர்ப்பம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் ஆனால் அவ்வாறு ஸ்கேன் மூலம் தெரிவதற்கு முன்பாகவே சிலசமயம் கருச்சிதைவு ஏற்பட்டு அதை பயோகெமிக்கல் பிரக்னன்சி (உயிர்வேதியியல் கர்ப்பம்) என்று கூறுவோம். இரத்தத்தில் கர்ப்பத்திற்கான ஹார்மோன்களின் அளவு உள்ளது.
ஆனால் ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்படாத கர்ப்பம் என்று புரிந்து கொள்ளப்படும். அது போன்ற பிரச்சனை தான் ரமீனா, ராஜா தம்பதிக்கு ஏற்பட்டிருக்கிறது. மிகவும் ஆரம்ப நிலையிலேயே இவ்வாறு கருச்சிதைவு ஏற்படுவதால் அது ஒரு மாதவிடாய் போலவோ அதை விட லேசாக அதிகமான ரத்தப்போக்குடனோ, முடிந்துவிடும்.
இவ்வாறு ஆரம்ப கால கட்டத்திலேயே சிதையும் கர்ப்பங்கள் கடுமையான குரோமோசோம் மாறுபாடுகள் உள்ளன. குழந்தைக்கு இருதயம் மூளை மற்றும் கிட்னி போன்ற முக்கிய உறுப்புகளில் பெரிய குறைபாடுகள் இருக்கலாம்.
வெகு அரிதாக கர்ப்பத்தை காப்பாற்றும் ஹார்மோன் அளவு குறைவாக இருந்தாலும் இவ்வாறு கருச்சிதைவு வெளி.
ஒருமுறை இயற்கையாக கருத்தரிக்கிறார் என்றாலே இருவருக்குமே இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பும் இயக்கமும் ஓரளவு சரியாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை இவ்வாறு கர்ப்பம் ஏற்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தேவையான போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை கணவன்-மனைவி இருவருமே இரண்டு மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டால் மீண்டும் கருத்தரிக்கும் போது ஆரோக்கியமான கரு உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
இப்பொழுது ரவீனா ஓரளவு மனம் சமாதானம் அடைந்தார். “ஒரு குறையுள்ள குழந்தை பிறப்பதைத் தான் கடவுள் தடை செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன் டாக்டர்!!. மனதை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திக் கொள்கிறோம்” என்று கூறி இருவரும் விடை பெற்றனர். அடுத்து நான்கு மாதங்கள் கழித்து ரமீனா மீண்டும் கருவுற்றிருந்தார். இந்த முறை இரண்டாவது மாதத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அழகான கருக் குழந்தை பனிக்குட நீரில் குதித்துக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த தம்பதிகளுக்கும் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.
மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.