20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது. காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்லச் செல்ல இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகாலையில் பலர் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சியைக் காணலாம். வார இறுதி நாட்களில் குழுக்கள் இணைந்து ஐசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஐசிஆர் சாலைகளில் சைக்கிள் ரைடு செல்கிறார். இவ்வாறு நாடு முழுவதும் சைக்கிள் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இவ்வாறு சைக்கிள் ஓட்டும் பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இன்றைய தினம் (ஜூன் 3) உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, சைக்கிள் ஓட்டும் பழக்கத்தால் மனிதர்களின் உடல் நலனிலும், நாட்டின் சுற்றுச்சூழல் நலனிலும் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த தினம் சரியாக இருக்கும்,
பசுமை இல்ல வாயு: காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது ஆகும். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் என்றும் ஐபிசிசி தெரிவித்துள்ளது.
உலகில் வெளியாகும் கார்பனில் 24 சதவீத கார்பன், மேட்டார் வாகனங்கள் இயக்கத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. எனவே, இதற்கு மாற்றான போக்குவரத்து முறையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து: கார்பன் அளவை குறைக்க இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து திட்டங்கள் அனைத்து நாடுகளும் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி நகரங்களில் சைக்கிள் ஓட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தவிர்த்து மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுளது.
உலக சைக்கிள் தினம்: ஒவ்வோர் ஆண்டு ஜூன் 3-ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. உடல் நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்துக்கும் ஏற்ற போக்குவரத்து முறை சைக்கிள் என்பதால் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஆண்டுதோறும் சைக்கிள் தினம் கொண்டாடப்படும் என்று 2018-ம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
150 கிராம் கார்பன்: சைக்கிளில் இருந்து எந்த வாயுவும் வெளியாவது இல்லை. ஒருவர் தனது காரை விட்டு சைக்கிளை பயன்படுத்துகிறார் என்றால், அவர் ஒரு கிலோ மீட்டருக்கு 150 கிராம் கார்பன் செல்வதை தடுத்துள்ளார். 7 கி.மீ சைக்கிள் ஓட்டினால் 1 கிலோ கார்பன் வெளியாவதை தடுக்கிறார். எனவே, கார்பன் வெளியாதை தடுப்பதில் சைக்கிள் பயன்பாடு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
தொற்றா நோய்கள்: வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக மனிதர்கள் உடற்பயிற்சி செய்வது குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இதயம், சர்க்கரை நோய்களின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே, உலகம் முழுவதும் உடற்பயிற்சி தேவையை உணர்த்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சைக்கிளிங் உள்ளிட்ட உடல் பயிற்சிகளை அதிகரிப்பதற்கான செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, நீங்கள் தினசரி 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் வாரத்திற்கு 1,000 கலோரிகளை எரித்து உடல் நலத்துடன், 1 கிலோ கார்பனை குறைத்து சுற்றுச்சூழல் நலமாக இருக்க உதவுவோம்.