பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது அனுமதியின்றி பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். நடிப்புக்காகத் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
இவர் கேரள மாநிலம் வாகனத்தில் உள்ள எஸ்டேட் ஒன்றில், தனது விலையுயர்ந்த ஜீப்பில், கடந்த சில நாட்களுக்கு முன் கார் பந்தயத்தில் ஈடுபட்டார். விவசாய நிலத்தில், அனுமதியின்றி பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஜோஜு ஜார்ஜ் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இடுக்கி மாவட்ட ஆர்.டி.ஓ., அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, அனுமதியின்றி பந்தயங்களில் பங்கேற்றதற்காக அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.