முன்னதாக, பட்டியலின சமூகத்தினருக்காக உழைக்கும் தன்னார்வ மற்றும் இதர நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை (Grant-in-Aid to Voluntary and other Organizations working for Scheduled Castes) மத்திய அரசு செயல்படுத்தி வந்தது.
இந்நிலையில், புதிய அணுகுமுறையை பின்பற்றும் நோக்கில் இத்திட்டத்தை ‘ஸ்ரேஷ்டா’ என மறுசீரமைப்பு செய்துள்ளது.
இந்த திட்டம் குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இதன்கீழ், ஆண்டுதோறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான (ஆண்டுக்கு தோராயமாக 3000) பட்டியலின மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேசிய நுழைவுத் தேர்வின் வெளிப்படையான வழிமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துடன் கூடிய சிறந்த தனியார் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பதற்காக சேர்க்கப்படுவார்கள். மாணவர்களின் ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும்.
அதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சமும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
கூடுதலாக, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம் அல்லது உயர் வகுப்பு கல்வித் திட்டத்துடன் மாணவர்கள் இணைக்கப்படுவர்.
இந்த உதவித்தொகை ஒவ்வொரு நிதியாண்டின் முதல் காலாண்டில், பள்ளிகளுக்கு நேரடியாக ஒரே தவணை முறையில் வழங்கப்படும். மாணவர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அமைச்சகத்தால் கண்காணிக்கப்படும்.
ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. நீண்ட காலமாக, பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தரமான கல்வி கிடைக்கப் பெறாதவர்களாகவும், சமத்துவமின்மைக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருந்து வந்தனர். மேலும், தரமான கல்வி அறிவு கிடைக்காததால் முன்னோக்கி செல்லும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருந்தனர். எனவே, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள பட்டியலின சமூகத்தை சேர்ந்த திறமையான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை தருவதற்காக ஷ்ரேஷ்டா திட்டம் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.