கடந்த ஓர் ஆண்டு காலமாக, தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் பொது அறிவுப் பிரிவில் இடம்பெறும். எனவே, கடந்தாண்டு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் (2021, july, august Current affairs) கவனம் பெற்ற முக்கிய நிகழ்வுகளை இங்கே காண்போம்.
ஆகஸ்ட் 1-7 : உலகத் தாய்ப்பால் வாரம்: இந்த ஆண்டின் உலகத் தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்து: ஆரோக்கியமான பூமிக்காக தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்
குழந்தை பிறந்த உடனேயே ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்ட ஆரம்பித்தல்
குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு வெறும் தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்தல்
6 மாதத்துக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவும் கொடுத்தல்
உள்ளிட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தாய்ப்பால் வாரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு-4 (2015-16) படி, இந்தியாவில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் 41.5% ஆகவும், 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பழக்கம் 55% ஆகவும், 6 மாதத்துக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவு கொடுத்தல் 42.2% ஆகவும் இருக்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்து இவை முறையே 55.4%, 48.3% மற்றும் 67.5% ஆகவும் இருக்கின்றன.
முத்துலெட்சுமி ரெட்டி: ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 30 அன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்த தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார். 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
Scarless Robotic Liver Donor Surgery at Rela Hospital: சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தைமுதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ஜுலை மாதம் தொடங்கி வைத்தார்.
ந.சுந்தரத்தேவன் IAS (ஓய்வு) தலைமையில் குழு: நலிவுற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, முன்னாள் தொழில்துறை செயலாளர் முனைவர் ந.சுந்தரத்தேவன் IAS (ஓய்வு) தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது.
தகைசால் தமிழர் விருது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
முன்னதாக, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உத்தரவிட்டிருந்தார். மேலும், “தகைசால் தமிழர்” விருத்தாளருக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின் போதும் வழங்கப்படும்.
நீதிபதி முருகேசன் குழு:
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆய்வு செய்து பரிந்துரை செய்திட தமிழ்நாடு அரசு சார்பில் நியமிக்கப்பட்ட, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை கடந்தாண்டு ஜுலை மாதம் தாக்கல் செய்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் தான் , பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது.
ஏ.கே ராஜன் குழு: தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்ககையைல் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு சார்பில் நியமிக்கப்பட்ட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே ராஜன் குழு தனது அறிக்கையை கடந்தாண்டு ஜுலை மாதம் தாக்கல் செய்தது.
இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம் திருத்தியமைப்பு:
கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர்பதவி நிரப்பப்படாமலும் உயர்கல்வி மன்றம் திருத்தியமைக்கப்படாமலும் இருந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு கடந்தாண்டு சூலை மாதம், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தியமைத்து உத்தரவிட்ட்டார்.
அதன்படி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக பேராசிரியர் அ.ராமசாமியும், உறுப்பினர் – செயலராக பேராசிரியர் சு.கிருஷ்ணசாமியும், பணி வழி உறுப்பினர்களாக நிதித்துறை செயலர், ஆளுநரின் செயலர், உயர்கல்வித் துறை செயலர், பல்கலைக்கழக மானியக் குழுசெயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், விவரங்களுக்கு TN State Council for Higher Education – Functions
இதையும் பார்க்க:
TNPSC Current Affairs 4: பொது அறிவுப் பிரிவில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
TNPSC Current Affairs 3: பொது அறிவுப் பிரிவில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
TNPSC Current Affairs 2: பொது அறிவுப் பிரிவில் மதிப்பெண் பெறுவது எப்படி?
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.