விக்ரம் படத்துக்கு மூன்று நாட்களுக்கு தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் இன்னும் சில மணிநேரத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ‘விக்ரம்’ தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்தப் படத்துக்கு மூன்று நாட்களுக்கு தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்கள் படத்துக்கு சிறப்பு கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கமல் நிறுவனம் மற்றும் கமல் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசின் கூடுதல் ஆணையர் எஸ்கே பிரபாகர் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே, விக்ரம் முதல்நாள் முதல் ஷோ பார்க்க தமிழகத்தின் பல தியேட்டர்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல் படம் வெளியாகவுள்ளது, சென்னையின் முக்கிய திரையரங்குகளில் கமல் ரசிகர்கள் நள்ளிரவு முதல் பட வெளியீட்டை நடத்தி வருகின்றனர்.